ஞாயிறு, 21 டிசம்பர், 2008

மழையாய் பொழிந்த எறிகணைகளுடன் அலை அலையாய் தாக்கிய புலிகள்: சிறிலங்கா ஊடகங்கள் பிரமிப்பு


கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன.
"லக்பிம" வார ஏட்டில் வெளியான பாதுகாப்பு பத்தியில் இடம்பெற்றுள்ளதாவது:
சிறிலங்கா படையின் 53 மற்றும் 55 ஆவது படையணிகள் மிக உக்கிர மோதல்களை கடந்த வாரம் சந்தித்துள்ளன. பாதகமாக காலநிலையும், சதுப்பு நிலங்களும் காயமடைந்த படையினரை அகற்றுவதில் பாரிய நெருக்கடிகளை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தன.
கிளாலி - முகமாலை களமுனைகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பலம் தொடர்பாக படையினர் தவறான கணிப்பை கொண்டிருந்தனர். ஆனால் அங்கு விடுதலைப் புலிகளின் பலம் அதிகம். இரு படையணிகளும் அதிக இழப்புக்களை சந்தித்த பின்னர் பின்வாங்கியுள்ளன.
55 ஆவது படையணி ஏ-9 நெடுஞ்சாலை வழியாகவும், 53 ஆவது படையணி அதற்கு கிழக்குப் புறமாகவும் நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. படையினர் தமது ஆயுதங்களுடன் பனை மரக்குற்றிகளையும், மணல் சாக்குகளையும் மேலதிகமாக தமது தோள்களில் காவிச் சென்றனர். இது உடனடியாக காப்பரன்களை அமைப்பதற்கு உதவும்.
விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்களின் அமைவுப் புள்ளிகள் அவர்களின் மோட்டார் அணிகளுக்கு நன்கு பரீட்சயமானது என்பதனால் படையினர் புதிய காப்பரன்களை அமைக்க வேண்டிய தேவை இருந்தது.
இதனிடையே, 55 ஆவது படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரசன்னா சில்வா தனது களமுனை அதிகாரிகளை முன்னணி அரண்களுக்கு சென்று விடுதலைப் புலிகளின் காப்பரண்களின் பலம் தொடர்பாக கண்காணிக்குமாறு பணித்திருந்தார். பிரசன்ன சில்வா முன்னர் சிறப்பு படையணியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்ததை விட அதிகளவான விடுதலைப் புலிகள் அங்கு பிரசன்னமாகி இருந்ததை களமுனை அதிகாரிகள் அவதானித்துள்ளனர். சதுப்பு நிலங்களின் ஊடாக காயமடையும் படையினரை அகற்றுவது கடினம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். பகல் வேளையில் வெளியான பிரதேசத்தின் ஊடாக காயமடைந்த படையினரை அகற்றுவது மேலும் கடினமானது.
தொடக்க மோதல்களில் 55 ஆவது படையணியைச் சேர்ந்த நான்கு படையினர் காயமடைந்ததுடன் அதில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
எனவே, நடவடிக்கையை தொடர்வதை 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி விரும்பவில்லை. அவர்கள் தமது முன்னைய நிலைகளுக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால், 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் கமல் குணரட்ன நடவடிக்கையை தொடர்வதில் தீவிரமாக இருந்தார். கடுமையான சமர் மூண்டது. இழப்புக்கள் அதிகமாவதை அவதானித்த படையினர் பின்னர் பின்வாங்க முடிவு செய்தனர்.
வெளியான பிரதேசங்களின் ஊடாக பின்வாங்கிய போதே அதிக இழப்புக்களை படையினர் சந்தித்ததாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த படையினரை காப்பாற்ற முனைந்த சமயம் பல படையினர் கொல்லப்பட்டனர். இந்த சமரில் 26 படையினர் கொல்லப்பட்டதுடன், 89 படையினர் காயமடைந்திருந்தனர்.
அதேசமயம், காலை 6:00 மணியளவில் 57 மற்றும் 58 ஆவது படையணிகள் கிளிநொச்சி நோக்கிய நகர்வை ஆரம்பித்தன. விடுதலைப் புலிகளின் 12 கி.மீ நீளமான "எல்" வடிவ காப்பரணை கைப்பற்றுவதே அவர்களின் முதன்மையான நோக்கம்.
விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தினர். சதுப்பு நிலங்களின் ஊடாக நகர்வது கடினம் என உணர்ந்த 58 ஆவது படையணி தனது நடவடிக்கையை கைவிட்டது.
எனினும் 57 ஆவது படையணி நடவடிக்கையை தொடர்ந்தது.
57 ஆவது படையணியின் மூன்று பிரிகேட்டுக்கள் இந்த நடவடிக்கையில் பங்குபற்றியிருந்தன. அடம்பனில் இருந்து 57-1 பிரிகேட் நகர்வை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதல்கள் உக்கிரமாக இருந்தது. இராணுவம் வான்படையினரை உதவிக்கு அழைத்தது.
57-2 பிரிகேட் இரணைமடு பகுதியால் நகர்வை மேற்கொண்டது. 57-4 ஆவது பிரிகேட் இரணைமடுகுளம் பகுதி ஊடாக நகர்ந்தது.
விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கினார்கள். 12 ஆவது சிங்க றெஜிமென்ட அதிக சேதங்களை சந்தித்தது. இழப்புக்கள் அதிகமாவதை அவதானித்த படையினர் பின்வாங்க முடிவு செய்தனர்.
இதன் போது 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காணாமல் போயினர்.
இந்த சமரின் போது கோப்ரல் நமால் உடுவத்தையும் அவரது குழுவினரும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். உடனடியாக அவர் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் அவர் பின்னர் நடைபெற்ற சமரில் கொல்லப்பட்டு விட்டார்.
உக்கிரமான எதிர்ச்சமரை தொடர்ந்து 57-2 ஆவது பிரிகேட் தமது நிலைகளில் இருந்து பின்வாங்கியது. விடுதலைப் புலிகள் இந்த பகுதியில் மூர்க்கமாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இருந்து படையினரை பின்வாங்கவும் செய்துள்ளனர்.
காலநிலையும் படையினருக்கு சாதகமானது அல்ல. இறுதியான தகவல்களின் படி 80 படையினர் கொல்லப்பட்டதுடன், 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். விடுதலைப் புலிகள் படையினரின் 36 உடலங்களை கைப்பற்றியிருந்தனர். கொல்லப்பட்ட படையினரை அகற்றுவதில் படையினர் அதிக சிரமங்களை சந்தித்திருந்தனர்.
இதனிடையே, முல்லைத்தீவை தனிமைப்படுத்துவதே படையினரின் நோக்கம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது எதிர்வரும் மாதங்களில் தெரிந்துவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
7 ஆயிரம் சிறிலங்கா படையினர் கடந்த செவ்வாய்கிழமை மேற்கொண்ட படை நடவடிக்கை நான்காவது ஈழப்போரில் மிகப்பெரும் எதிர்த்தாக்குதலை சந்தித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் படைத்தரப்பு மிகவும் அதிகளவு சூட்டுவலுவை பயன்படுத்தியிருந்தது. கிளிநொச்சியை கைப்பற்றுவது தான் படையினரின் பிரதான நோக்கம்.
ஐந்து முனைகளில் உக்கிர மோதல்கள் நடைபெற்றுள்ள போதும் உடகவியலாளர்கள் களமுனைகளுக்கு செல்ல முடியாததால் இழப்புக்கள் தொடர்பான உண்மையான தகவல்களை பெறமுடியாதுள்ளது.
படை வட்டாரங்களில் இருந்து தகவல்களை பெறுவதும் முன்னர் போன்று இலகுவானதல்ல. கடந்த வாரங்களாக படைத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கை தொடர்பான பேச்சுக்களே அதிகம் இருந்தன.
இந்த நடவடிக்கை தொடர்பான கவனம் சிறிலங்காவில் மட்டுமல்லாது முழு உலகிலும் ஏற்பட்டிருந்தது. கிளிநொச்சி விரைவில் கைப்பற்றப்படலாம் எனவும் அது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நோக்கத்துடன் வந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவர்கள் கிளிநொச்சி சில நாட்களில் வீழ்ந்து விடும் என நம்பியிருந்தனர். தற்போது அவர்களில் பலர் தமது நாடுகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 53 மற்றும் 55 ஆவது படையணிகள் முகமாலை களமுனையில் நகர்வை தொடங்கியிருந்தன.
53 ஆவது படையணி கிளாலி நோக்கியும், 55 ஆவது படையணி முகமாலை நோக்கியும் நகர்வை மேற்கொண்டிருந்தன.
பரந்தன் - பூநகரி வீதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த "எல்" வடிவ மண் அரணை கைப்பற்றும் நேக்கத்துடன் 58 ஆவது படையணி நகர்வை தொடங்கியிருந்தது. அங்கு கடுமையான மோதல்கள் தொடங்கின.
57 ஆவது படையணி கிளிநொச்சி நோக்கிய நகர்வில் ஈடுபட்டிருந்த போது அடம்பன் பகுதியில் உக்கிர மோதல்கள் ஆரம்பித்திருந்தன. கடும் மழை அந்த பிரதேசத்தை சேறும் சகதியுமாக மாற்றியிருந்தது.
இந்த பகுதியில் தான் அதிகளவான படையினர் காணாமல் போயிருந்தனர். எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பான தகவல்களை சில காரணங்களால் அறிய முடியாவில்லை.
வன்னிக்கு மேற்குப் புறமாக புதன்கிழமையே அதிக மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
திருமுறிகண்டி மற்றும் இரணைமடு பகுதிகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மோதல்களில் இரு தரப்பும் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளன. படையினர் தமது முன்னரங்க நிலைகளை மாற்றி அமைத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கியதாகவும், சில இடங்களில் மிக அருகாமையில் நேரடி மோதல்கள் நடைபெற்றதாகவும், விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைகளை மழை போல பயன்படுத்தியதாகவும் தனது பெயரை குறிப்பிடாத படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது ஆயுத விநியோகத்தை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளையும், மோட்டார் எறிகணைகளையும், ஏனைய ஆயுதங்களையும் தருவித்து வருவதாக படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுடன் ஆயுத கொள்வனவு தொடர்பாக அவர்கள் அண்மையில் பேச்சுக்களையும் நடத்தியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
இராணுவம் கடந்த மாதம் மேற்கொண்ட நகர்வுகளின் போது, ஒரு நகர்வில் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவார்கள் என பலர் நம்பினார்கள்.
கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சமரில் மூன்று முக்கிய படையணிகள் பங்குபற்றியிருந்தன. அவர்களின் ஒரே நோக்கம் கிளிநொச்சி நோக்கியதே.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் தோல்வியானது முல்லைத்தீவு அல்லது கிளிநொச்சி நோக்கிய நகர்வுகள் இந்த வருடத்திற்குள் நிறைவுபெறும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளது. எனவே நாலாவது ஈழப்போர் 2009 ஆம் ஆண்டிற்கும் தொடரப்போகின்றது என அந்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: