ஞாயிறு, 21 டிசம்பர், 2008

முல்லைத்தீவில் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் காயம்


முல்லைத்தீவு கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வாடிகள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு கரையோரப் பகுதி மீது இன்று சனிக்கிழமை காலை 5:00 மணிக்கும் பின்னர் 5:35 நிமிடத்துக்குமாக இரு தடவைகள் வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி குண்டுத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் கரையோரப் பகுதி மீன் வாடிகள் இரண்டும் படகுகள் இரண்டும் எரிந்து நாசமாகியுள்ளன. சங்கர் மற்றும் சுதர்சன் ஆகியோரின் மீன் வாடிகளே தாக்குதலுக்கு இலக்காகி எரிந்து நாசமாகின.
பொதுமக்களின் வீடுகள் இரண்டும் சேதமாகியுள்ளன. யோகநாதன் மற்றும் கமலேந்திரன் ஆகியோரின் வீடுகளே தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்தன.
இதேவேளை, மீண்டும் இன்று காலை 7:15 நிமிடத்துக்கும் காலை 8:00 மணிக்குமாக இரு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கருத்துகள் இல்லை: